மதுரை அருகே மெக்சிகோ பெண் கொலை செய்து எரிக்கப்பட்ட வழக்கில், அவரின் கணவருக்குக் கீழமை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மெக்சிகோ நாட்டைச் சேர்ந்தவர் மார்ட்டின் மான்ட்ரிக் (40). இவர் பி.டி.எஃப். ஆராய்ச்சிப் பட்டம் பெறுவதற்காக ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன் கோவிலில் 2011ஆம் ஆண்டு முதல் தங்கியிருந்தார். இவரும், மெக்சிகோவைச் சேர்ந்த செசில்லா டேனிஷ் அகோஸ்டா (36) என்பவரும் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு 5 வயதில் அடிலா (தற்போது வயது 15) என்ற மகள் உள்ளார்.
செசில்லா கேரள மாநிலம் திருச்சூரில் தங்கியிருந்து, மோகினியாட்டம் கற்று வந்தார். மகளைப் பார்க்க மாதம் இரு முறை கிருஷ்ணன்கோவில் வந்து செல்வார். 4.4.2012-ல் அடிலாவைப் பார்க்க செசில்லா கிருஷ்ணன்கோவில் வந்தார். பின்னர் மகளை பிரான்ஸ் நாட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கணவரிடம் செசில்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாகக் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்தத் தகராறில் செசில்லாவை மார்ட்டின் கத்தியால் குத்திக் கொலை செய்தார். சடலத்தை மார்ட்டின், ஆஸ்டின்பட்டி தோப்பூர் கண்மாய் அருகே பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். இதையடுத்து மார்ட்டினை ஆஸ்டின்பட்டி போலீஸார் கைது செய்தனர்.
இந்த வழக்கை மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரித்து, மார்ட்டின் மான்ட்ரிக்கிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து 11.9.2020-ல் தீர்ப்பளித்தது.
இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரியும், அதுவரை தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீனில் விடுதலை செய்யக் கோரியும் மார்ட்டின் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரருக்கு மதுரை மாவட்ட மகளிர் நீதிமன்றம் வழங்கிய ஆயுள் தண்டனை நிறுத்தி வைக்கப்படுகிறது. மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் மாதந்தோறும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்'' என்று கூறியுள்ளனர்.