தமிழகம்

அமைச்சர் என்பதால் சலுகை வழங்க முடியாது; ஆக.6-ல் ஆஜராகவும்: செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆகஸ்ட் 6ஆம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்ட சென்னை சிறப்பு நீதிமன்றம், அமைச்சர் என்பதால் சிறப்புச் சலுகை ஏதும் வழங்க முடியாது எனத் தெரிவித்துள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 2011-15ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக கணேஷ்குமார், தேவசகாயம், அருண்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில், செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மூன்று வழக்குகளைப் பதிவு செய்தனர். ஒரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து அமைச்சர் செந்தில்பாலாஜி விலக்குப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் மீதமுள்ள இரு வழக்குகளும், சென்னை எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி அலிசியா முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிகை நகல் வழங்குவதற்காக இந்த வழக்கில் செந்தில்பாலாஜியை நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அவர் ஆஜராகவில்லை.

அமைச்சர் என்பதாலும், ஏற்கெனவே திட்டமிடப்பட்ட துறை சார்ந்த கூட்டம் இருப்பதாலும், இன்று ஆஜராகவில்லை என்றும் அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சர் என்பதால், சிறப்புச் சலுகை வழங்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதி, விசாரணையை வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதிக்குத் தள்ளிவைத்து, அன்றைய தினம் கண்டிப்பாக ஆஜராக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT