ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து நேற்று மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. இதனால், காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியைக் கடந்த நீர்வரத்து நேற்று காலை 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. மேலும், பகலில் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது. நேற்று மாலை விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியைக் கடந்தது. இதனால், தமிழக, கர்நாடக வனப்பகுதி எல்லையை தொட்டபடி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
மேலும், ஆற்றில் உள்ள பெரும் பாறைகளுக்கு இடையிலான பள்ளங்கள் நீரில் மூழ்கியபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரதான அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓசையுடன் கொட்டி வருகிறது.
வெள்ளப் பெருக்கு காரணமாக அசம்பாவிதங்களை தடுக்க வருவாய், வனம் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் ஒகேனக்கல் உள்ளிட்ட தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதிகளை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
19,665 கனஅடி நீர்வரத்து
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6 ஆயிரத்து 841 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 19 ஆயிரத்து 665 கனஅடியாக உயர்ந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது.
நீர்வரத்து அதிகரிப்பால் அணை நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 72.55 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 73.27 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 35.57 டிஎம்சி-யாக உள்ளது.