புதுச்சேரியில் புதிதாக 104 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 25)வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5,950 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 82, காரைக்கால் - 8, ஏனாம் - 2, மாஹே - 12 பேர் என மொத்தம் 104(1.75 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 58 வயது பெண், காரைக்காலைச் சேர்ந்த 40 வயது ஆண் நபர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,789 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 20 ஆயிரத்து 331 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 170 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 752 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தமாக 922 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக 102 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 17 ஆயிரத்து 620 (97.75 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 14 லட்சத்து 67 ஆயிரத்து 306 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 418 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 6 லட்சத்து 76 ஆயிரத்து 356 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
5 குழந்தைகளுக்கு கரோனா:
கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள குழந்தைகளுக்கான கரோனா வார்டில் 7 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 5 வயதுக்கு உட்பட்ட 3 குழந்தைகளும், 5 வயதுக்கு மேற்பட்ட 2 குழந்தைகளும் என 5 குழந்தைகள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட தாயுடன் ஒரு குழந்தையும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தைக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது. மேலும் ஒரு குழந்தை சந்தேகத்தின் பேரில் அனுமதிக்கப்பட்டுள்ளது.