தமிழகம்

கச்சத்தீவில் புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா: உறவினர்களை சந்தித்து இருநாட்டு தமிழர்கள் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

கச்சத்தீவில் நடைபெற்ற புனித அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இந்திய-இலங்கை தமிழர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.

ராமேசுவரம் ஓலைக்குடாவைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பட்டங்கட்டி, தொண்டியைச் சார்ந்த சீனிக்குப்பன் பட்டங்கட்டி ஆகியோர் 1913-ம் ஆண்டு கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசை யில் புனித அந்தோனியார் ஆலயத்தை நிறுவினர். அதன்பின் ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் அந்தோனியார் ஆலயத் திருவிழா நடைபெற்று வருகிறது. கடலில் இயற்கைச் சீற்றம், புயல், பேராபத்து ஆகிய காலங்களில் தங்களைக் காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குச் செல்வது வழக்கம்.

இந்த ஆண்டு கச்சத்தீவு புனித அந்ததோனியார் ஆலயத் திருவிழா பிப். 20, 21 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. இதில் கலந்து கொள்வதற்காக ராமேசுவரத்தில் இருந்து இந்திய பக்தர்கள் 3,249 பேர் 93 விசைப்படகுகளில் சனிக்கிழமை கச்சத் தீவுக்கு சென்றனர். இலங்கையில் இருந்து மூவாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் மறைமாவட்டப் பேராயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் சனிக்கிழமை மாலை கச்சத்தீவு ஆலய கொடியை ஏற்றி திரு விழாவை தொடங்கி வைத்தார். இலங்கை சிறுவர் விவகாரத் துறை அமைச்சர் விஜயக்கலா மகேஸ்வரன், யாழ்ப்பாண இந்திய தூதர் என்.நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சனிக்கிழமை இரவு முதல் முறையாக கச்சத்தீவை சுற்றி படகில் தேர் பவனி வந்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்புத் திருப்பலி நடைபெற்றது. இதற்கு நெடுந்தீவு மறைமாவட்ட ஆயர் ஆண்டனி ஜெயரஞ்சன், கரையூர் அருட் தந்தை சகாயராஜ் ஆகியோர் தலைமை வகித்தார். பின்னர் காலை 9 மணி அளவில் கொடியிறக்கத்துடன் கச்சத்தீவு திருவிழா முடிவடைந்தது.

இத் திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பக்தர்கள் இலங்கையில் உள்ள தங்கள் உறவினர்களை சந்தித்து மகிழ்ந்தனர்.

கச்சத்தீவில் நடைபெற்ற புனித அந்தோனியார் சிலுவைப் பாதை. (உள்படம்) அலங்கரிக்கப்பட்ட புனித அந்தோனியார்.

SCROLL FOR NEXT