புதுச்சேரியில் முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.500 உயர்த்தும் வகையில், முதியோர் ஓய்வூதிய விதிகளைத் (OAP Rules) திருத்துவதற்கான அறிவிப்பாணையை வெளியிட துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்புதல் தந்துள்ளார்.
இது தொடர்பாக, நேற்று இரவு (ஜூலை 23) முக்கியக் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ.500 உயர்த்தும் வகையில், முதியோர் ஓய்வூதிய விதிகளைத் (OAP Rules) திருத்துவதற்கான அறிவிப்பாணையை வெளியிட, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் முன்வரைவுக்கு ஒப்புதல் தந்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில், அரசின் சுகாதாரத்துறைச் செயலாளர் தலைமையில் மாநில உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (SOTTO) ஏற்படுத்த ஒப்புதல் தந்துள்ளார். இவ்வமைப்பு செயல்பாடுகளில் துறை ரீதியாக உதவ, இந்திராகாந்தி அரசு மருத்துவமனை & ஆராய்ச்சி நிறுவனத்தின் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் ஜிப்மர் பேராசிரியர்களைக் கொண்ட மாநில அளவிலான உறுப்பு மாற்று நிபுணர் குழு அமைக்கவும் ஆளுநர் ஒப்புதல் தந்துள்ளார்.