விழுப்புரம் அருகே கக்கனூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அமைச்சர் பெரியகருப்பன் திறந்து வைத்தார். அருகில் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் உள்ளனர். 
தமிழகம்

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

செய்திப்பிரிவு

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கஞ்சனூர், வெங்கந்தூர், வீரமூர்,மங்களபுரம், கக்கனூர், காணை ஆகிய கிராமங்களில் நேற்று புதிய பணிகளை தொடங்கி வைத்தனர். முடிக்கப்பட்ட பணிகளையும் திறந்து வைத்தனர். கக்கனூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறியது:

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஊரக பகுதிகள் குறிப்பாக கிராமம், குக்கிராமங்களுக்கு சென்று நடைபெற்று வரும் பணிகள் எந்த நிலையில் இருக்கிறது. என பார்வையிட்டு வருகிறோம் தேக்க நிலையில் உள்ள பணிகளை உடனே நிறைவேற்றுவது குறித்துஅதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.

அதே நேரத்தில் பழைய திட்டங்களில் தேக்கம், குழப்பம் இருப்பதை கண்டறிந்து அவற்றையும் விரைந்து முடிக்க அறிவுறுத்தி வருகிறோம்.

நகரங்களுக்கு இணையாக குடிநீர், தெருவிளக்கு, தடையில்லா மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் கிராமப்புறங்களுக்கு கொண்டுபோய் சேர்க்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார்.

நூறுநாள் வேலை திட்ட பணிகளில் உள்ளூர் மக்கள்தான் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அந்த ஊரின் தேவைகள் என்னவென்று நன்கு தெரியும். அதன்படி தேவையான இடங்களில் பணிகளை சிறப்பாக செய்துவருகிறார்கள்.

காலநிலை மாற்றத்திற்கேற்ப விவசாய சாகுபடி நடந்து வருகிறது. காலத்திற்கு ஏற்றவாறு விவசாயம் மட்டுமின்றி எல்லாவற்றிலும் மாற்றம் வரும். உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் உரிய நேரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்தார். அப்போது எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT