தமிழகம்

கோயில் யானைகளைப் பெரிய வனப்பகுதியில் வைத்துப் பராமரிக்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

கோவில் யானைகளைப் பெரிய அளவிலான பகுதியில் இயற்கை சூழலில் வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும் படி, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் 34 கோவில் யானைகள் உள்ளதாகக் கூறியுள்ளார். மதுரை அழகர் கோவில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் மற்றும் பவானி சங்கமேஸ்வரர் கோவில் யானைகள், அதிகாரிகளின் கவனக்குறைவால் பலியாகியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவில் யானைகளைச் சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாலும், சிமெண்ட் தரையில் அடைக்கப்பட்டிருப்பதாலும், கால்களில் தொற்று பாதித்து அவை பலியாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், கோவில் யானைகளைப் பெரிய அளவிலான இடத்தில் இயற்கை சூழலில் வைக்க வேண்டும் எனவும், அவற்றுடன் பெண் யானையும் உடனிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT