தமிழகம்

உரிமையியல் நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு: உயர் நீதிமன்ற நீதிபதிகள் தகவல்

கி.மகாராஜன்

உரிமையியல் நீதிபதி தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு சலுகை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

திண்டுக்கல் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஸ்ரீநித்யா, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

நான் 40 சதவீத மாற்றுத் திறனாளி. சட்டப் படிப்பு முடித்துள்ளேன். உரிமையியல் நீதிபதி பணிக்கான எழுத்துத்தேர்வில் பங்கேற்க அதிகபட்ச வயது வரம்பு 40 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பு மற்றும் அனுபவத் தளர்வு வழங்கப்படவில்லை. வரும் காலங்களில் உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கு வயது மற்றும் அனுபவத் தளர்வு சலுகை வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, ''பாக்கியராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் மனுதாரர் கோரிக்கை தொடர்பாக தலைமை நீதிபதி தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட குழு ஆலோசித்து வருகிறது.

எனவே விரைவில் உரிமையியல் நீதிபதி தேர்வில் மாற்றுத் திறனாளிகளுக்கான தளர்வுகள் வழங்குவது தொடர்பாக அறிவிப்பு வெளியாகும்'' என்று கூறி மனுவை முடித்து உத்தரவிட்டது.

SCROLL FOR NEXT