தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக கேள்வி - பதில் வடிவில் இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவையிலிருந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சட்டப் பிரச்சினைகள் எப்படி இருந்தாலும் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளை ஆய்வு செய்த தலைமைத் தேர்தல் ஆணையர், நஜீம் ஜைதி, போலி வாக்காளர்களை நீக்க வரும் 15 முதல் 29-ம் தேதி வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணி நடைபெறும் என கூறியிருக்கிறார். இது வரவேற்கத்தக்கது.
சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி தமிழகத்தைச் சேந்த 4 பேர் உட்பட 10 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. நாட்டின் பாதுகாப்பு பணியில் உயிரிழந்த வீரர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
கேரள சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட ரூ. 100 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இதற்கு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பதில் தெரிவிப்பார்கள் என நம்புகிறேன்'' என கருணாநிதி தெரிவித்துள்ளார்.