தமிழகம்

திமுகவுக்கு பாஜகதான் எதிரி: மதுரையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை தகவல்

கி.மகாராஜன்

திமுகவுக்கு பாஜகதான் எதிரி என்ற ரீதியில் தமிழக அரசியல் களம் நகர்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

மதுரை ஆத்திக்குளம் பகுதியில் பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசனை நேரில் சந்தித்து அவரது தந்தை மறைவுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மாநிலங்களில் உள்ள பாஜக கட்சி நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து வருகிறேன், ஊரடங்கு தளர்வு வந்தால் உள்ளரங்கு கூட்டங்கள் நடத்தவுள்ளோம்.

சித்தாந்த அடிப்படையிலான கட்சி் தான் பாஜக. திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிகாட்டுவோம், அப்போது மக்கள் எங்கள் பக்கம் வருவார்கள். மோடியின் நலத்திட்டங்ளால் தமிழகத்தில் மூன்றரை கோடி பேர் பலன் பெற்றுள்ளனர், இதன் காரணமாக பாஜக தேர்தலில் வெற்றி வாய்ப்பு பெறும்.

பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்கள் செல்போன் ஒட்டுகேட்பு என்ற புகார் மீது மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளனர்.

தனி மனித கருத்துரிமைக்கு மதிப்பளிக்கும் பாஜக யாருடைய பேச்சையும் ஒட்டு கேட்காது, ஒட்டு கேட்பு குறித்து ஊகத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டை வைக்கிறார்கள்.

பெகாசஸ் ஸ்பைவேரிடம் நம்பர் இருப்பதால் ஒட்டு கேட்கப்பட்டது என்பது உண்மையல்ல, அரசியல் காரணங்களுக்காக ஒரு குறிப்பிட்ட ஊடகம் வெளியிட்ட செய்தி தான் ஒட்டு கேட்பு விவகாரம். தனிமனித சுதந்திரத்தை பாதுகாக்கும் கட்சி பாஜக, ஒட்டுகேட்பு புகார் என்பது பொய் செய்தி.

திமுகவிற்கு பாஜகதான் எதிரி என்ற அடிப்படையில் தமிழக அரசியல் களம் நகர்கின்றது, நாங்கள் திராவிட சித்தாந்தம் பேச விரும்பவில்லை. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல திமுகவில் தற்போது மூன்று முதல்வர்கள் உள்ளது தான் திமுகவின் சித்தாந்தம், .

திமுக தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

SCROLL FOR NEXT