அனுமதியின்றி பேனர்கள் வைக்கும் திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்றுவெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘பேனர் கலாச்சாரத்துக்கு திமுகவினர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்’ என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஆனால், இன்னும்கூட ஆங்காங்கே திமுகவினரும், நிர்வாகிகளும் பேனர் வைப்பது தொடர்கிறது.
போக்குவரத்துக்கு இடையூறாகவும், பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கும் வகையிலும் தமிழகத்தில் சென்ற அதிமுக ஆட்சியில் கடைப்பிடிக்கப்பட்ட பேனர் கலாச்சாரத்தால் மரணங்களும், விபத்துகளும் நிகழ்ந்தன. ‘எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்க மாட்டோம்” என்று முதன்முதலில் உயர் நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின்தான் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பதை திமுகவினர் அனைவரும் அறிவர்.
அதன்பிறகு, திமுகவினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளனர். ஆனாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளை திமுக ஒருபோதும் அனுமதிக்காது.
ஆகவே, அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று திமுகவினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். ஸ்டாலின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.