கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து விரட்டி அடித்துள்ளனர்.
ராமேசுவரத்திலிருந்து நேற்று காலை 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
நேற்று இரவு கச்சத்தீவு அருகே இந்திய-இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர், அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகவும், அங்கிருந்து செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சுமார் 10-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளின் மீன்பிடி வலைகளை அறுத்தும் இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டினர். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் கரை திரும்பினர்.
இதுகுறித்து ராமேசுவரம் மீனவர்கள் கூறும்போது, ஒரு பக்கம் டீசல் விலை 100 ரூபாய் வரை உயர்வு, மற்றொரு புறம் பிடித்து வரப்படும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை.
இந்நிலையில் மீன்பிடிக்கச் செல்லும் ராமேசுவரம் மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினாரல் பெரும் தொல்லை ஏற்பட்டு, ஒவ்வொரு விசைப்படகிற்கும் பல லட்ச ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது என்றனர்.