மதுராந்தகத்தைச் சேர்ந்த 9 வயது மாணவர் சார்ஜில் இருந்த அலைபேசியை எடுத்துப் பேசிய போது அலைபேசி வெடித்ததில் கண்களில் பலத்த காயம் ஏற்பட்ட சம்பவத்தைக் கூறி மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
அலைபேசியை சார்ஜ் செய்து கொண்டே பேசிய போது அந்த அலைபேசி வெடித்ததில் 9 வயது சிறுவன் தனுஷ் தன் கண் பார்வையை இழந்து படுகாயமுற்ற சம்பவம் என் மனதை உலுக்கி விட்டது.
எழும்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அச்சிறுவனை சந்தித்து நலம் விசாரித்து, பெற்றோருக்கும் ஆறுதல் கூறினேன். கண் பார்வை பாதிப்புக்குள்ளான அச்சிறுவனை பார்த்து வேதனை அடைந்தேன்.
இது போன்ற எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க அலைபேசியை சார்ஜில் போட்டுக் கொண்டே இனி யாரும் தயவு செய்து பேச வேண்டாம் என்று அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன்.