தமிழகம்

அம்மா மருந்தகத்தில் 70% வரை விலையை குறைத்து விற்கலாம்: வழிகாட்டுகிறது ராஜஸ்தான் மலிவுவிலை மருந்தகம்

டி.எல்.சஞ்சீவி குமார்

தமிழகத்தில் அம்மா மருந்தகங்களை அரசு விரைவில் தொடங்கவுள்ளது. ராஜஸ்தானில் இருக்கும் மலிவு விலை மருந்தகங்களின் பாணியை பின்பற்றினால் மற்ற கடைகளைவிட அம்மா மருந்தகத்தில் 70 சதவீதம் வரை விலை குறைத்து விற்கலாம் என்கின்றனர் மருத்துவத் துறையினர்.

இது சாத்தியமா என மருந்து தயாரிப்புத் துறையைச் சேர்ந்த சிலரிடம் கேட்டோம். அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக பல மடங்கு விலை குறைத்து விற்க முடியும். மருந்து தயாரிப்பில் நடக்கும் மோசடிகளே அதிக விலைக்குக் காரணம். இங்குள்ள பல மருந்து நிறுவனங்களுக்கு தயாரிப்பு யூனிட்டே கிடையாது. அவை தங்களுக்குத் தேவையான மூலப் பொருட்களை வெளியே வாங்கி, மருந்து, மாத்திரைகளை குடிசைத் தொழில்போல தயாரிக்க ஆர்டர் கொடுக்கின்றன. ஒரு கிலோ மூலப்பொருளில் இவ்வளவு மாத்திரைகள்தான் தயாரிக்க வேண்டும் என்று கணக்கீடுகள் உண்டு. ஆனால், அந்த மூலப்பொருளில் சாதாரண சுண்ணாம்பு பவுடரையோ, உணவு மாவுப் பொருளையோ கலந்து தயாரிப்பை இரட்டிப்பாக்கி விடுகின்றனர்.

வியாபாரிகளுக்கு இலவசம்

வியாபாரிகளை கவர்ந்து, தங்கள் தயாரிப்பு மருந்துகளை விற்க பல நிறுவனங்கள் ‘இலவச’ திட்டங்களை அறிவிக்கின்றன. மருந்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து சூப்பர் ஸ்டாக்கிஸ்ட் ஏஜென்சி 100 மாத்திரை வாங்கினால், அதற்கு 200 மாத்திரை கூடுதலாக இலவசம். இது வியாபாரிகளுக்கு மட்டும்தான். இதனால், வாடிக்கையாளர்களுக்கு எந்த சலுகையும் கிடைக்காது. வயிற்றுப் போக்குக்கு பயன்படுத்தக்கூடிய ‘அமிக்காசின்’, காய்ச்சல், தலைவலிக்கு பயன்படுத்தும் ‘பாரசிட்டமால்’, ஆன்டிபயாடிக் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள், அறுவை சிகிச்சைக்கு பின்பு பயன்படுத்தக்கூடிய ஊசி மருந்துகள், அல்சர், இருமல் மருந்துகள் போன்றவற்றில்தான் இதுபோன்ற இலவசங்கள் அள்ளித் தரப்படுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதவிர, மருந்து வியாபாரத்தில் ‘பிராண்ட்’ பெயரால் நடக்கும் கொள்ளை மிக அதிகம். பல்வேறு பிராண்ட்களில் இருக்கும் அடிப்படை மூலக்கூறு மருந்து ஒன்றுதான். உதாரணத்துக்கு ஒவ்வாமைக்காக எடுத்துக் கொள்ளும் ‘அவில்’ மாத்திரையின் விலை மிகக் குறைவு. ஆனால், அதில் உள்ள cetirizine Hydrochloride மூலக்கூறு கொண்ட மாத்திரைகள், பல்வேறு பிராண்ட்களில் 10 மடங்கு வரை விலை அதிகம் வைத்து விற்கப்படுகின்றன.

தங்களுக்கு ‘கமிஷன்’ கிடைக்காது என்பதால் அவில் மாத்திரையை பெரும்பாலோர் பரிந்துரைப்பதில்லை.

சில ஆண்டுகளுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஆமிர்கான் நடத்திய ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் இந்தியாவில் பிராண்டின் பெயர்களால் நடக்கும் மருந்து ஊழல்கள் அம்பலமாகின. ராஜஸ்தானில் டாக்டர் சமீத் ஷர்மா என்பவரால் நடத்தப்படும் மலிவு விலை மருந்தகங்கள் பற்றியும் அந்த நிகழ்ச்சியில் ஆமிர்கான் சொல்லியிருப்பார். அந்த மருந்தகங்களில் மருந்துகளின் விலை, வெளிமார்க்கெட்டைவிட சுமார் 10 மடங்கு குறைவு. ஏனெனில் அவர்கள் ‘பிராண்ட்’களை பின்பற்றுவதில்லை.

ஒரே மூலக்கூறு கொண்ட விலை குறைந்த மருந்துகளை மட்டுமே பரிந்துரைக்கின்றனர். இன்றும் ராஜஸ்தானில் அந்த மருந்தகங்கள் சிறப்பாக செயல்படுகின்றன.

தற்போது அம்மா மருந்தகங்களை கொண்டு வருவது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதுதொடர்பான கூட்டங்களில், தனியார் மருந்துக் கடைகளைவிட 10 முதல் 20 சதவீதம் வரை விலையைக் குறைத்துக் கொடுக்கலாம் என்று அதிகாரிகள் ஆலோசனை சொல்லி வருவதாக தெரிகிறது.

தமிழகத்தில் ஏற்கெனவே கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் சில மருந்து கடைகளில் 20 சதவீதம் வரை தள்ளுபடி அளிக்கின்றனர். நேர்மையான மருத்துவர்களை கலந்தாலோசித்தால் அரசுக்கு பல யோசனைகள் கிடைக்கும். வெளியில் விற்பதைவிட 60 முதல் 70 சதவீதம் வரை குறைவான விலைக்கு மருந்துகளை அம்மா மருந்தகங்களில் விற்க முடியும்.

          
SCROLL FOR NEXT