புதுச்சேரியில் நாளை முதல் அனைத்து மதுபானங்களின் விலையும் 20 சதவீதம் உயர்வு
புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபானக்கடைகள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுகடைகள் உள்ளன.
புதுச்சேரியில் ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என மொத்தம் 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனையாகிறது. 2017க்கு பிறகு புதுச்சேரி அரசு கலால்துறை, திடீரென்று கலால்வரியை கடந்த 2019 பிப்ரவரியில் உயர்த்தியது.
அதைத் தொடர்ந்து 2019 ஜூலையில் மீண்டும் விலையை அரசு உயர்த்தியது.
பின்னர் கரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கரோனாவரி விதிக்கப்பட்டு, தமிழகத்துக்கு இணையாக மதுபானங்கள் விலை இருந்தன. இந்நிலையில் கரோனா வரி கடந்த மாதம் நீக்கப்பட்டு விலை குறைந்தது.
இந்நிலையில் கலால்துறை புதிய உத்தரவை இன்று பிறப்பித்தது.
கலால்துறை துணை ஆணையர் சுதாகர் பிறப்பித்துள்ள உத்தரவில், "புதுச்சேரியில் விற்கப்படும் இந்திய தயாரிப்பு அல்லது வெளிநாட்டு தயாரிப்பு அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து மதுபானங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து 20 சதவீதம் விலை உயர்வு ஜூலை 15 (நாளை) முதல் அமலுக்கு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.