பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

நீலகிரி, கோவையில் கனமழை; 10 மாவட்டங்களில் மிதமான மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

செய்திப்பிரிவு

நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று (ஜூலை 14) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தென்மேற்குப் பருவக்காற்று காரணமாகத் தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்ச மழை அளவு (சென்டிமீட்டரில்):

சின்னக்கல்லாறு (கோவை) 9, பந்தலூர் (நீலகிரி) 7, அவலாஞ்சி (நீலகிரி) 6, மேல் பவானி (நீலகிரி) 5, வால்பாறை (கோவை) 4, பெரியாறு (தேனி) 3, பொள்ளாச்சி (கோவை) 2, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், புழல் (திருவள்ளூர்), திருமூர்த்தி அணை (திருப்பூர்) தலா 1.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக் கடல் பகுதிகள்: வங்கக் கடல் பகுதிக்கான எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்படுகிறது.

அரபிக் கடல் பகுதிகள்:

14.07.2021 முதல் 16.07.2021 வரை: கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

14.07.2021 முதல் 18.07.2021 வரை: தென்மேற்கு அரபிக் கடல், மத்திய அரபிக் கடல், வடகிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்".

இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT