திருநெல்வேலியில் வாடகை கார் (கேப்ஸ்) நிறுவனத்திலும், அதன் உரிமையாளர் வீட்டிலும் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
திருநெல்வேலியைச் சேர்ந்தவர் ஜாகீர் உசேன். தனியார் வாடகை கார் நிறுவனம் நடத்தி வரும் இவர், வெளிநாட்டு பணப்பரிமாற்றம் செய்யும் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து, திருநெல்வேலிக்கு 2 கார்களில் வந்த 10 பேர் கொண்ட சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள், கொக்கிரக்குளம் வசந்த நகரில் உள்ள ஜாகீர்உசேனின் வீடு மற்றும் திருநெல்வேலி ஸ்ரீபுரத்தில் உள்ள அவரதுவாடகை கார் அலுவலகம் ஆகியவற்றில் சோதனை மேற்கொண்டனர். மாலை வரையில் நீடித்த இந்த சோதனையின்போது முக்கியஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது.
அதிக அளவில் வெளிநாட்டு பணப்பரிமாற்றம் நடைபெற்றதாகவும், வெளிநாட்டு பணப்பரிவர்த்தனையில் கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் வந்த புகார்களை தொடர்ந்து இச்சோதனை நடத்தப்பட்டது. சோதனை நடைபெற்ற பகுதிகளில் உள்ளூர் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.