புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு மேலும் 2 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திட்டம் மற்றும் நிதித் துறை, பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை ஆகியன அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி வெற்றி பெற்றது. தொடர்ந்து கடந்த மே 2ம் தேதி ஆட்சியமைத்தது.
அதையடுத்து அமைச்சர்கள் ஒதுக்கீடு செய்து பதவியேற்பதற்கு ஐம்பது நாட்களானது. பதவியேற்றும் பொறுப்புகளை ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இந்நிலையில், அமைச்சர்கள் பட்டியலை ஆளுநர் தமிழிசையிடம் முதல்வர் ரங்கசாமி தந்தார். அதையடுத்து ஆளுநர் ஒப்புதல் தந்து தலைமைச் செயலருக்கு அனுப்பினார். அதையடுத்து அன்று மாலையில் துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
வழக்கமாக முதல்வர் வசம் இருக்கும் உள்துறையை பாஜக கோரியது. அதை இம்முறை பாஜகவுக்கு முதல்வர் தந்தார்.
பாஜகவைச் சேர்ந்த அமைச்சர் நமச்சிவாயத்துக்கு உள்துறை தரப்பட்டது. ஆனால் முக்கியத் துறைகள் என்.ஆர்.காங்கிரஸ் வசம் இருந்தன. நிதி உள்பட முக்கிய துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தன.
இந்நிலையில் முக்கிய துறையான நிதி முதல்வருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிக்கு திட்டம் மற்றும் நிதித் துறை, பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை ஆகியவை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு புதுச்சேரி அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது.