தமிழகம்

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் 6,912 குழந்தை திருமணங்கள் தடுப்பு: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் 6,912 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவர் சரஸ்வதி ரங்கசாமி தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் கரோனா நோய்தொற்று ஊரடங்கு காலத்தில் 6,912 குழந்தைத்திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. நோய்தொற்று காலத்தில் 3,592 தாய், தந்தை இருவரில் ஒருவரை இறந்தவர்களை ஆணையம் தத்தெடுத்து உள்ளது. அதே போல் 93 குழந்தைகள், தாய் மற்றும்தந்தையை இழந்துள்ளனர். அவர்களையும் ஆணையம் தத்தெடுத்துள்ளது. இவர்களுக்கு அரசு சார்பில் இலவச உதவி செய்யப்பட்டு வருகிறது.

ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக வந்த புகாரில் சென்னை மற்றும் குமாரபாளையம் ஆகிய இடங்களில் விசாரணை நடத்தப்பட்டு அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.மதுரையில் 7 குழந்தைகள் திருடப்பட்டதாக பதியப்பட்ட வழக்கில், விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

உடன் ஆணைய உறுப்பினர் ராமராஜ், நாமக்கல் மாவட்டஆட்சியர் ஸ்ரேயா சிங் உள்ளிட்டோர் இருந்தனர்.

SCROLL FOR NEXT