தமிழகம்

நீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை: உயர் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், அவற்றைப் பெறுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து, அவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில், தடுப்பூசி செலுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த ஜோதிபாசு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தற்போது தடுப்பூசி மருந்துகள் சப்ளை குறைந்த அளவில் உள்ளதாகவும், தடுப்பூசி மருந்துகளைப் பெறுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் குறிப்பிட்டது.

மேலும், நீதிமன்ற வளாகங்களில் தடுப்பூசி முகாம்களை நடத்த மாவட்ட முதன்மை நீதிபதிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும், சென்னை உயர் நீதிமன்றத்திலும், பார் கவுன்சிலிலும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிட்ட நீதிபதிகள், இதற்கு தமிழக அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டனர்.

மருத்துவ ரீதியாகத் தேவைப்படுவோருக்குத் தடுப்பூசி செலுத்துவது என்பது தவிர்க்க முடியாதது என்பதால், நீதிபதிகள், வழக்கறிஞர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை எனக் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

SCROLL FOR NEXT