ஆசாரிபள்ளம் அரசு மருத்து வமனையில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து கரோனா வார்டில் இருந்த நோயாளிகள் வேறு கட்டிடத்துக்கு மாற்றப்பட்டனர்.
இங்கு, கரோனா சிகி்ச்சை பிரிவில் 55 பேரும், தீவிர சிகிச்சை பிரிவில் ஆக்சிஜன் உதவியுடன் 23 பேரும் உள்ளனர்.
கரோனா வார்டு கட்டிடத்தின் பின் பகுதியில் குவிந்து கிடந்த காலி மருந்து அட்டை பெட்டிகளில், நேற்று முன்தினம் இரவு தீப்பிடித்தது. இதனால், கரோனா வார்டு முழுவதும் புகைமூட்டம் நிலவியது. நோயாளிகளின் உறவினர்கள் அச்சமடைந்து சத்தமிட்டதால் பரபரப்பு நிலவியது.
உடனடியாக நோயாளிகள் பாதுகாப்பாக இடமாற்றப்பட்டனர். நாகர்கோவில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதனால்,கட்டிடத்துக்குள் தீ பரவவில்லை. அதே நேரம் பெரும் புகைமூட்டம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த், எஸ்.பி. பத்ரிநாராயணன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.