தரமற்ற சாலைகள் அமைத்த நெடுஞ்சாலைத் துறையைச் சேர்ந்த 3 பொறியாளர்கள் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை இன்று (ஜூலை 07) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம் இடையே தரமற்ற சாலைகள் அமைக்கப்படுவதாக, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு புகார் வந்தது. அப்புகாரின் அடிப்படையில், பொதுப்பணித்துறை அமைச்சர் அச்சாலையை ஆய்வு செய்ய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
அதன்பேரில், சாலைப் பணிகளை ஆய்வுசெய்யத் தரக் கட்டுப்பாட்டுக் குழுவினருடன் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மைய இயக்குநர் கீதா, சிவகங்கை மாவட்டம், ஆண்டிச்சியூரணி - ஒட்டாணம் இடையே அமைக்கப்பட்ட சாலைப் பணிகளை நேரில் ஆய்வும் முறையான விசாரணையும் மேற்கொண்டார்.
அந்த ஆய்வில், சாலையின் தரம் மற்றும் அமைப்பில் குறைபாடு உள்ளது உறுதி செய்யப்பட்டது. தரமற்ற சாலைகள் அமைத்த அலுவலர்களான உதவி கோட்டப் பொறியாளர் மாரியப்பன், உதவிப் பொறியாளர் மருதுபாண்டி, தரக் கட்டுப்பாடு உதவிப் பொறியாளர் நவநீதி ஆகியோரைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்புப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செந்தில் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சாலைப் பணி ஒப்பந்ததாரர் தர்ஷன் அண்ட் கோவின் ஒப்பந்தத்தை ரத்து செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது".
இவ்வாறு நெடுஞ்சாலைத் துறை தெரிவித்துள்ளது.