தமிழகம்

பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவித்ததுபோல, தனித் தேர்வர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரியும், துணைத்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரியும் இரு மாணவர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

கரோனா பரவல் தீவிரமடைந்ததை அடுத்து, தமிழகத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வுகளை ரத்து செய்த அரசு, அனைவரும் தேர்ச்சி எனக் கடந்த பிப்ரவரியில் அறிவித்தது. இந்த உத்தரவின் பலனைத் தனித் தேர்வர்களுக்கும் வழங்கக் கோரி, கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த சிறு மளிகை வியாபாரியான ஆனந்தராஜின் மகன் பிளஸ்வின் என்ற தனித் தேர்வர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளர்.

அந்த மனுவில், 2020ஆம் ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டபோதும், தனித் தேர்வர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டதாகவும், ஒரே வகையான பாடத்திட்டத்தைப் பின்பற்றும்போது, பள்ளி மாணவர்கள் என்றும், தனித் தேர்வர்கள் என்றும் பாகுபாடு காட்டுவது தவறு எனவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணகுமார், நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதற்கிடையில், பத்தாம் வகுப்புத் துணைத் தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிடக் கோரி, சென்னை சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த எஸ்.அஜய் தாஸ் என்ற மாணவரும் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், 2019ஆம் ஆண்டு ஏப்ரலில் நடைபெற்ற 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் மூன்று பாடங்களில் தோல்வி அடைந்ததாகவும், பின்னர் ஜூன் மாதம் நடத்தப்பட்ட துணைத்தேர்வில் ஒரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மீதமுள்ள இரண்டு பாடங்களை 2020ஆம் ஆண்டு எழுத திட்டமிட்டிருந்த நிலையில், கரோனோ பரவல் காரணமாகத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதாகவும், இரு ஆண்டுகளாக துணைத்தேர்வுகள் நடத்தாதது மேற்படிப்பு மற்றும் வேலைவாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

துணைத்தேர்வு நடத்தக் கோரி பள்ளிக் கல்வித்துறைச் செயலாளருக்கு அனுப்பிய மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

SCROLL FOR NEXT