தமிழகம்

தமிழகம் வீணடிக்கும் தடுப்பூசி தரவுகளை விளம்பரப்படுத்துங்கள் என பிரதமர் கேட்டுக்கொண்டார்: எல்.முருகன் பேட்டி

செய்திப்பிரிவு

தமிழக அரசியலில் நடைபெறும் தேசப் பிரிவினைவாதச் செயல்பாடுகளைப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். குறிப்பாக ஜெய்ஹிந்த் விவகாரம் குறித்து பிரதமரிடம் தெரிவித்துள்ளோம் என பிரதமரைச் சந்தித்தபின் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஆர்.காந்தி, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், சி.சரஸ்வதி ஆகியோர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியதாவது:

''தமிழ்நாட்டில் பாஜக வரவே வராது என்று எதிர்க்கட்சியினர் கூறிய நிலையில் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இன்று பிரதமரைச் சந்தித்து வாழ்த்து பெற்றோம். இந்தச் சந்திப்பின்போது நீர் சேமிப்பு குறித்து பிரதமர் அறிவுறுத்தினார்.

தமிழகம் குறித்து பிரதமர் எங்களிடம் கேட்டறிந்தார். ராமேஸ்வரம், தஞ்சாவூர், மதுரை என பல ஆன்மிகத் தலங்கள் உள்ள மாநிலம் தமிழகம். எனவே, சுற்றுலாத் துறையை மேம்படுத்த வேண்டும் எனக் கேட்டுள்ளோம். தமிழக நலன் தொடர்பாக பாஜக தொடர்ந்து குரல் கொடுக்கும்.

நீட் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி உள்ளனர். ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் திமுக அதைத் தேர்தல் அறிக்கையில் கொண்டுவந்துள்ளது. நீட் தொடர்பாக அரசு அமைத்த குழு சாதகங்களைக் கேட்காமல் பாதகங்களை மட்டும் கேட்கிறது. கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு என்ன செய்வதென்று தெரியாமல் இதுபோல ஒரு குழுவை திமுக அரசு அமைத்துள்ளது.

தமிழக அரசியலில் நடைபெறும் தேசப் பிரிவினைவாதச் செயல்பாடுகளைப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளோம். குறிப்பாக ஜெய்ஹிந்த் விவகாரம் குறித்துப் பிரதமரிடம் தெரிவித்துள்ளோம். மத்திய அரசின் திட்டங்களைத் தமிழக மக்களிடம் கொண்டுசேர்க்க பிரதமர் அறிவுறுத்தினார்.

தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி தொடர்பாக கோரிக்கை வைத்தோம். அதற்கு பிரதமர், தடுப்பூசி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் முன்கூட்டியே தடுப்பூசியும் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக அனைத்துத் தரவுகளும் உள்ளன. மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் ஒதுக்கீட்டில் தமிழகம் வீணடிப்பதைத் தரவுகளோடு விளம்பரப்படுத்துங்கள் எனப் பிரதமர் எங்களிடம் அறிவுறுத்தினார்”.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT