பழங்குடியின மக்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தியதால், நீலகிரி ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.
ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவின் தீவிர முன்னெடுப்பாலும், அரசு அதிகாரிகளின் கூட்டுமுயற்சியாலும் கரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக நீலகிரி மாவட்டம் எதிர்கொண்டது, கரோனாவை கட்டுக்குள் வைக்கும்நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது ஆண்டாக இ-பதிவு மற்றும் இ-பாஸ் நடைமுறையில் உள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் 6 வகையான பழங்குடியின மக்களையும் கரோனா தொற்றில் இருந்து பாதுகாத்திடும் வகையில் வனத்தை ஒட்டிய பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின்வீடுகளுக்கே சென்று, தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசின் அனைத்துத் துறையினரும் ஈடுபட்டனர். தடுப்பூசியால் அச்சமடைந்திருந்த பழங்குடியின மக்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவரையும் தடுப்பூசி செலுத்தி கொள்ள தயார்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்தில் தகுதி வாய்ந்த 21,151 பழங்குடியினர் மற்றும் 38,658 தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டிலேயே பழங்குடியினர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திய முதல்மாவட்டம் என்ற பெருமையை நீலகிரி பெற்றது. சென்னையில் நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.