சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ள நிவாரண நிதி வழங்குவதற்கான கணக்கெடுப்புகளில் குளறுபடி நடந்துள் ளதால், அனைத்து குடும்பங்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: வெள்ள பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்குவதுதான் சரியானதாக இருக்கும். அரசின் நிவாரண நிதி எல்லோருக்கும் முறையாக சேருவதாக தெரியவில்லை. வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக வீடுகளுக்கு நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியினர் சொல்கிற இடங்களில் அமர்ந்துகொள்ளும் அதி காரிகள், கணக்கெடுப்புக்காக பொது மக்களை அங்கு வரச் சொல்கின்றனர்.
இந்த தகவல் தெரியாமல் பலர் உள்ளனர். ஆகவே, அவர்களின் பெயர் வெள்ள நிவாரண நிதி பெறுவோரின் பட்டியலில் இடம் பெறவில்லை. இதனால் அவர்கள் வெள்ள நிவாரண நிதி பெற முடியாத சூழல் உருவாகியுள்ளது. உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் வெள்ள நிவாரண உதவியை பெற முடியாத நிலை உள்ளது. கணக்கெடுப்பில் விடுபட்ட வர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ள தால், வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு மக்கள் படை எடுக்கின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் விவரங்களை வாங்காமல் தொலைபேசி எண்கள் மட்டுமே வாங்கப்படுவதாக தெரிகிறது.
தொலைபேசி எண்ணின் மூலம் முகவரியை பெற்று ஆய்வு நடத்தி நிவாரண நிதியை தருவோம் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். இது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. முதல்முறை நடத்திய கணக்கெடுப்பில் முறைகேடுகள் நடந்ததே இதற்கு காரணம். எனவே, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் வெள்ள நிவாரண நிதி வழங்க வேண்டும்.
மேலும் அரசு அறிவித்துள்ள ரூ.5 ஆயிரம் நிவாரணம் போதாது என்பதால் அதனை ரூ.10 ஆயி ரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.