புதுச்சேரியில் புதிதாக 216 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை கடந்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஜூலை 1) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,349 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 175 பேருக்கும், காரைக்காலில் 24 பேருக்கும், ஏனாமில் ஒருவருக்கும், மாஹேவில் 16 பேருக்கும் என மொத்தம் 216 (2.59 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் ஒருவர், காரைக்காலில் ஒருவர் என 2 பேர் உயிரிழந்துள்ளனர். மாஹே மற்றும் ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,751 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 17 ஆயிரத்து 465 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 350 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,991 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,341 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 227 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 13 ஆயிரத்து 373 (96.52 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 13 லட்சத்து 16 ஆயிரத்து 296 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் 11 லட்சத்து 30 ஆயிரத்து 586 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 1,303 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.