சேலம் நெடுஞ்சாலை நகரில் நாடக கலைஞர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நிவாரண பொருட்களை வழங்கினார். 
தமிழகம்

நாடகக் கலைஞர்கள் 300 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கினார்: எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி

செய்திப்பிரிவு

சேலம் மாவட்டத்தில் உள்ள நலிவடைந்த நாடகக் கலைஞர்கள் 300 பேருக்கு, கரோனா கால நிவாரணமாக அரிசி, மளிகைப் பொருட்கள் உள்பட 30 பொருட்களை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி நேற்று வழங்கினார்.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, பல்வேறு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடகக் கலைஞர்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, சேலத்தில் உள்ள அவரது இல்லத்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த நலிவடைந்த நாடகக் கலைஞர்கள் 300 நபர்களுக்கு, அரிசி, மளிகைப் பொருட்கள், காய்கறிகள், முகக் கவசம், கிருமி நாசினி உள்பட 30 வகையான பொருட்களை நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நாடக நடிகர் சங்க பொருளாளர் சக்திவேல், சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ., பாலசுப்ரமணியம், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாசலம், அவைத்தலைவர் பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், அதிமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாடகக் கலைஞர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் நிவாரணப் பொருட்களை பெற்றுக் கொண்டனர்.

SCROLL FOR NEXT