தமிழகம்

பழையாறு தடுப்பணை டெண்டரை இறுதி செய்யத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு

கி.மகாராஜன்

பழையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் டெண்டரை இறுதி செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுசீந்திரத்தைச் சேர்ந்த லட்சுமி சரண், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''அகஸ்தீஸ்வரம் பகுதியில் 300 ஆண்டுகளாக உப்பளத் தொழில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள பழையாற்றில் வடக்கு தாமரைக் குளத்தில் தடுப்பணை கட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தடுப்பணையைக் கட்டினால் உப்பளம் அமைந்துள்ள பகுதிக்குள் தண்ணீர் புகுந்து தொழில் பாதிப்பு ஏற்படும்.

கடலில் பெரிய அலை வரும் பகுதியில் இருந்து 50 அடி தூரத்தில் தடுப்பணை அமைவதால் கடல் நீர் ஊருக்குள் புகுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, தடுப்பணை கட்டத் தடை விதித்து உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர், தடுப்பணை கட்டுவதற்கான டெண்டரை இறுதி செய்யக் கூடாது என உத்தரவிட்டு அடுத்த விசாரணையை ஜூலை 20-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT