தமிழகம்

எச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் ஜூலை 23 முதல் விசாரணை: உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தகவல்

கி.மகாராஜன்

சென்னை உயர் நீதிமன்றத்தை விமர்சனம் செய்ததாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மீது பதிவு செய்த வழக்கின் விசாரணை, திருமயம் நீதிமன்றத்தில் ஜூலை 23 முதல் தொடங்கும் என உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக வழக்கறிஞர் துரைசாமி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

''புதுக்கோட்டை திருமயத்தில் 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா மேடை அமைத்துப் பேச போலீஸார் அனுமதி மறுத்தனர். இதனால் எச்.ராஜா போலீஸாரைக் கடுமையாகப் பேசி, நீதிமன்றத்தையும் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக எச்.ராஜா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. போலீஸார் விரைவில் விசாரணையை முடித்து 2 மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் 3 ஆண்டாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்''.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, திருமயம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதையடுத்து குற்றப்பத்திரிகை நகலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருமயம் நீதிமன்றத்தில் போலீஸார் எச்.ராஜாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை நகலை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். மேலும் திருமயம் நீதிமன்றத்தில் ஜூலை 23 முதல் வழக்கு விசாரணை தொடங்கப்பட உள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

தொடர்ந்து மனுதாரரின் வழக்கறிஞர் வாதிடுகையில், ''குற்றப்பத்திரிகையில் எச்.ராஜா தலைமறைவாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அவர் காரைக்குடியில்தான் உள்ளார்'' என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை முடித்துவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT