தமிழகம்

சட்டவிரோத குவாரிகளைக் கட்டுப்படுத்த திடீர் சோதனைக் குழு: அரசுக்கு உயர் நீதிமன்றம் யோசனை

செய்திப்பிரிவு

சட்டவிரோதமான குவாரிகளைக் கட்டுப்படுத்த திடீர் சோதனைகள் நடத்துவதற்கு குழுக்களை அமைக்கலாம் எனத் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை தாலுக்கா, திருப்பெயர் கிராமத்தில் உள்ள குவாரிகள் குறித்த தகவல்களை மறைத்து வருவாய்த் துறை அதிகாரிகள், அரசுக்கு துரோகம் செய்துவிட்டதாகவும், 2005 முதல் 2020 வரை உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக குவாரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபு உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழக தொழில்துறைச் செயலாளர் சார்பில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

குவாரி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுவிட்டதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், சட்டவிரோதமான குவாரிகள் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தனர்.

சட்டவிரோதமான குவாரிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசுக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், சட்டவிரோதமான குவாரிகளை திடீர் ஆய்வுகள் செய்யவும், மாஃபியாக்களைக் கட்டுப்படுத்தவும் குழுக்களை அமைக்கலாம் எனத் தமிழக அரசுக்கு யோசனை தெரிவித்தனர். நான்கு வாரங்களில் இது சம்பந்தமாக விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யத் தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT