தமிழகம்

திருப்பூரில் 100 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்க தொடங்கின

செய்திப்பிரிவு

திருப்பூரில் 100 சதவீத தொழிலாளர்களுடன் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் நேற்று முதல் இயங்கத் தொடங்கின.

திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தொற்று இரண்டாம் அலை மெதுவாக குறைய தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் வரும் 5-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் கரோனா பாதிப்பு அதிகம் மற்றும் குறைவாக உள்ள மாவட்டங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், சில தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், நேற்று முதல் 100 சதவீத தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, பணிக்கு வந்த தொழிலாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது. கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே நிறுவனத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். அனைவரும் முகக் கவசம் அணிந்திருந்தனர்.

போக்குவரத்து நெரிசல்

திருப்பூர் மாநகரில் காலை 10 மணிக்கு நிறுவனங்களுக்கு செல்ல வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் ஒரே நேரத்தில் வந்ததால், குமரன் சாலை, அவிநாசி சாலை, பல்லடம் சாலை என பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேபோல், மாலை நேரமும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

SCROLL FOR NEXT