எழும்பூர் அருங்காட்சியகம் உள்ளிட்ட தமிழகத்தின் மாவட்டங்களில் உள்ள அருங்காட்சியகங்கள் இன்று முதல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட்டுள்ளன. தினமும் மாலை 5 மணி வரை இயங்கும். பொதுமக்கள் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வரவேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அருங்காட்சியகங்களின் இயக்குநர் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
''தமிழக அரசு அறிவித்துள்ளபடி கரோனா பெருந்தொற்று ஊரடங்கு (கோவிட்-19) தளர்வு செய்யப்பட்ட நிலையில் (28.06.2021) இன்று முதல் சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகம் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்து விடப்படுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை அருங்காட்சியகத்தைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.
அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள் உரிய முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளி உள்ளிட்ட அரசால் அறிவிக்கப்பட்ட கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி பார்வையிடுமாறு தெரிவித்து அனுமதிக்கப்படுகிறார்கள்.
அதேபோல் வகை 2 மற்றும் 3-ல் உள்ளடங்கிய அரியலூர், கடலூர், கிருஷ்ணகிரி, பழநி, கன்னியாகுமரி, மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட அருங்காட்சியகங்களும் இன்று (28.06.2021) முதல் பார்வையாளர்கள், கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகளின்படி பின்பற்றிப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது''.
இவ்வாறு அருங்காட்சியகங்களின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.