புதுச்சேரியில் புதிதாக 231 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். 96.21 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று (ஜூன் 27) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,148 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 170 பேருக்கும், காரைக்காலில் 31 பேருக்கும், ஏனாமில் 8 பேருக்கும், மாஹே 22 பேருக்கும் என மொத்தம் 231 (2.84 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், புதுச்சேரியில் 2 பேர், காரைக்காலில் ஒருவர் என 3 பேர் உயிரிழந்துள்ளனர். மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,744 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவே உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 16 ஆயிரத்து 645 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது மருத்துவமனைகளில் 445 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 2,227 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 2,672 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 331 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 12 ஆயிரத்து 229 (96.21 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 12 லட்சத்து 84 ஆயிரத்து 89 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது.
இதில் 11 லட்சத்து 2,856 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 4 லட்சத்து 73 ஆயிரத்து 702 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.