தருமபுரி மாவட்டம் பொம்மிடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது.
சேலத்திலிருந்து இன்று காலை (27-ம் தேதி) சரக்கு ரயில் ஒன்று ஜோலார்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக இந்த ரயிலின் ஒரு பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது. இதை அறிந்த சரக்கு ரயிலின் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தினார்.
பின்னர் தடம்புரண்ட ரயில் பெட்டியை தொழில்நுட்பp பணியாளர்கள் மூலம் சரி செய்யும் பணி தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சரக்கு ரயில் தடம் புரண்ட காரணத்தால் அவ்வழியே செல்லும் இதர சரக்கு மற்றும் பயணிகள் ரயில்களை இயக்குவதில் அப்பகுதியில் சிறு தாமதம் ஏற்பட்டு வருகிறது.
இருப்பினும் தடம்புரண்ட ரயில் விரைவில் சீரமைக்கப்பட்டு ஜோலார்பேட்டை நோக்கிப் புறப்பட்டுச் செல்லும் என்றும், இதர ரயில்களின் போக்குவரத்தில் ஏற்பட்ட சிறு இடையூறுகள் சரிசெய்யப்பட்டு விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் ரயில்வே பணியாளர்கள் தெரிவித்தனர்.