சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியில் சத்து மாத்திரை சாப்பிட்ட பெண் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக ஈரோடு மாவட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர். 
தமிழகம்

கரோனாவை தடுப்பதாக மர்ம நபர் வழங்கிய மாத்திரையை சாப்பிட்ட பெண் உயிரிழப்பு: கணவர், மகள் உட்பட 3 பேருக்கு சிகிச்சை

செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை கே.ஜி.வலசு பெருமாள்மலை பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ண கவுண்டர் (75). விவசாயி. இவரது மனைவி மல்லிகா (58). மகள் தீபா (30). இவர்களது விவசாய தோட்டத்தில் குப்பம்மாள் (65) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர்கள் 4 பேரும் நேற்று வழக்கம்போல் தோட்டத்தில் பணியாற்றி கொண்டி ருந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், கரோனா சிறப்பு சிகிச்சை முகாமில் இருந்து வந்ததாகக் கூறி பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் சோதனை செய்துள்ளார். மேலும், தொற்று ஏற்படாமல் இருக்க சத்து மாத்திரை கொண்டு வந்துள்ளதாகக் கூறி மாத்திரைகளை கொடுத்துள்ளார். இதனை நம்பிய 4 பேரும் மாத்திரையை சாப்பிட்டுள்ளனர். சிறிது நேரத்தில் 4 பேருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் வழியிலேயே மல்லிகா இறந்தார். ஆபத்தான நிலையில் கருப்பண்ணன், தீபா, குப்பம்மாள் ஆகியோர் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அனுப்பப்பட்டனர். எஸ்பி சசிமோகன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். ஈரோடு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, முன்விரோதம் காரணமா அல்லது கொள்ளை நோக்கத்தோடு மாத்திரை வழங்கப்பட்டதா என விசாரிக்கின்றனர்.

SCROLL FOR NEXT