தமிழகம்

40 ஆண்டுகளுக்குப் பிறகு புதுவையில் பெண் அமைச்சர்

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏவுக்கு அமைச்சர் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

புதுவை மாநிலத்தில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ் -பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணியில் அமைச்சர்கள் பங்கீடு, பாஜக அமைச்சர் மாற்றம், என்.ஆர்.காங்கிஸ் அமைச்சர்கள் தேர்வில் குழப்பம் என இழுபறி நீண்டுகொண்டே இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பின்னர் அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா வருகிற 27-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தரப்பில் நமச்சிவாயம், சாய்சரவணக் குமார் ஆகியோர் அமைச்சர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது,

என்.ஆர்.காங்கிரஸில் தேனி ஜெயக்குமார், லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோர் கொண்ட பட்டியலுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அனுமதி புதுச்சேரி அரசுக்கு இன்று வந்துள்ளது. இதில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பெண் எம்எல்ஏவுக்குப் புதுவையில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1980-ம் ஆண்டு காங்கிரஸ், திமுக கூட்டணி அமைச்சரவையில் ரேணுகா அப்பாத்துரை கல்வி அமைச்சராக இருந்தார்.

இதன் பிறகு 40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்ற சந்திர பிரியங்கா, ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார், இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார். இவர் 2ஆவது முறையாக நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

பாஜக சார்பில் இடம்பெற்றுள்ள நமச்சிவாயம் வில்லியனூர் தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்று வந்தவர். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு மாறி வெற்றி பெற்றுள்ளார். தற்போது 4-வது முறையாக மீண்டும் அமைச்சராகிறார். இதேபோல் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார் ஆகியோர் 2-வது முறையாக அமைச்சர்கள் ஆகின்றனர். பாஜக தரப்பில் சாய்சரவணக் குமார் முதல் முறை வெற்றி பெற்று அமைச்சராகிறார்.

SCROLL FOR NEXT