தமிழகம்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

செய்திப்பிரிவு

வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“வங்கக் கடலில் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், பாம்பன் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரின் இத்தகைய அத்துமீறலை மத்திய அரசு இனியும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது.

இலங்கை கடற்படையினரின் தாக்குதலில் நல்வாய்ப்பாக 9 மீனவர்களும் காயமின்றி உயிர் தப்பிவிட்டாலும் அவர்களின் படகு சேதமடைந்துவிட்டது. இலங்கை கடற்படையினரின் இந்தச் செயலை இந்திய அரசு கண்டிப்பதுடன், சேதமடைந்த படகு உரிமையாளருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் தாக்குதலுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத்தீவை மீட்க சட்டபூர்வமான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT