மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட அனுமதிக்கக் கூடாது எனத் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கோரிக்கை விடுத்துள்ளார்.
காவிரி நதிநீர் ஆணையத்தின் 12-வது கூட்டம் இன்று (ஜூன் 25) காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. ஆணையத்தின் தலைவர் எஸ்.கே.ஹெல்டார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் பொதுப்பணித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன், பொதுப்பணித்துறை, அரசு சிறப்புச் செயலாளர் கே. அசோகன் (நீர்வளத்துறை), முதன்மை தலைமைப் பொறியாளர் கே.ராமமூர்த்தி, கர்நாடக அரசு சார்பில் நீர்வளத்துறைச் செயலாளர் ராகேஷ், கேரள அரசு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பி.கே.ஜோஷ், புதுச்சேரி அரசு சார்பில் ஆணையர் மற்றும் செயலாளர் விக்ராந்த் ராஜா, மத்திய நீர்வளத் துறை சார்பில் நவீன்குமார், மத்திய வேளாண்மைத்துறை சார்பில் கோபால், மத்திய ஊரக வளர்ச்சித் துறை சார்பில் ஸ்ரீ சஞ்சய் அவாஸ்தி மற்றும் ஆணையத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
"தமிழகத்திற்கு உச்ச நீதிமன்ற ஆணைப்படி வழங்கவேண்டிய தண்ணீர் ஜூன், 2021 மாதத்திற்கு 9.19 டிஎம்சியும், ஜூலை மாதத்திற்கு 31.24 டிஎம்சியும் குறுவை சாகுபடிக்கு மாதாந்திர வாரியாக தண்ணீர் வழங்க வலியுறுத்தப்பட்டதன் பேரில், கர்நாடகா நீரை வழங்க வேண்டும்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்ட முயல்வதை நிறுத்த வேண்டும். அணை கட்டுவதற்கு எந்தவித ஆரம்பக்கட்டப் பணிகளும் செய்ய ஆணையம் அனுமதிக்கக் கூடாது. மேலும், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் இக்கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிப்பதைத் தவிர்க்க வேண்டும்" எனத் தமிழகம் சார்பில் சந்தீப் சக்சேனா கடும் ஆட்சேபனை தெரிவித்தார். இதனால் இது தொடர்பான விவாதம் எடுத்துக்கொள்ளப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், சேலம் சரபங்கா நீரேற்றும் திட்டம், காவிரி குண்டாறு நதிகள் இணைப்பு திட்டம் ஆகியவை குறித்து பின்பு விவாதிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.