தங்க நகைக்கு 'ஹால்மார்க்' முத்திரை கட்டாயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து விற்பனையாளர்களுக்கு ஹால்மார்க் உரிமம் இலவசமாகப் பதிவு செய்து தரப்படுவதாக இந்தியத் தர நிர்ணய அமைவன (பிஐஎஸ்) கோவை கிளைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தங்கத்தின் மீதான மோகம் குறையாததால், அதன் தேவை அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் தரம் குறைவான தங்க நகைகளை வாங்கி ஏமாறாமல் இருக்க ‘ஹால்மார்க்’ முத்திரை திட்டத்தை பிஐஎஸ் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, பிஐஎஸ்ஸால் அங்கீகரிக்கப்பட்ட ஹால்மார்க் மையங்கள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்கள் மூலம் வியாபாரிகள் தரும் நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அதன் தரம் பதிவு செய்யப்படுகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் 22 காரட் தங்கத்துக்கு 916 முத்திரை அளிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் தங்க நகைகள் அனைத்திலும் ஹால்மார்க் முத்திரை கட்டாயம் என்ற புதிய விதிமுறை கடந்த 15-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக பிஐஎஸ் கோவை கிளைத் தலைவர் மீனாட்சி கணேசன் கூறும்போது, ''கோவை கிளை அலுவலகம் கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், நாமக்கல், தருமபுரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. நகை விற்பனையாளர்கள் பிஐஎஸ் ஹால்மார்க் உரிமம் பதிவு செய்வது தொடர்பான சிக்கல்களைத் தீர்க்க கோவை கிளை அலுவலகத்தில் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
நகை விற்பனையாளர்கள் www.manakonline.in என்ற இணையதளத்தின் மூலம் ஹால்மார்க் பதிவுக்காக விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பதிவு செய்யக் கடந்த 15-ம் தேதி வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது கட்டணம் ஏதும் இல்லாமல் பதிவு செய்துகொள்ளலாம்.
இதுதொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 63859 06131, 78754 53000, 95667 65122, 90036 66567 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், ஹால்மார்க் பதிவு செய்வதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை www.bis.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். கட்டாய ஹால்மார்க் நடைமுறையின் மூலம் குறைந்த தரத்தில் தங்க நகைகள் விற்பது தவிர்க்கப்படும். தங்க நகைகள் வாங்கும் நுகர்வோர் ஏமாறாமல் பாதுகாக்கப்படுவர்'' என்று தெரிவித்தார்.