போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவர்களது புகைப்படத்திற்கு கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோரை காவல் துறையினர் காவல் நிலையம் அழைத்துச் சென்று கொடூரமாகத் தாக்கி சிறையில் அடைத்தனர்.
கோவில்பட்டி கிளைச் சிறையில் இருவரும் ஜூன் 22-ம் தேதி இரவு அடுத்தடுத்து உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதில் சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்தார். மற்ற 9 பேரும் தொடர்ந்து சிறையில் உள்ளனர். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஜெயராஜ், பெனிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சாத்தான்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களது படங்களுக்கு கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் ஜெயராஜ் - பென்னிக்ஸ் இல்லத்துக்குச் சென்று அவர்களது குடும்பத்தினரை சந்தித்து கனிமொழி ஆறுதல் கூறினார்.
மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், எஸ்.பி ஜெயக்குமார், ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் வணிகர்கள், பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டனர்.