கரோனா அலை பரவல் காரணமாக சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளை ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி தாக்கலான மனு இரண்டாம் அமர்வுக்கு மாற்றப்பட்டது.
திருச்சியைச் சேர்ந்த சிவகாமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
இந்தியா முழுவதும் உள்ள சிறைகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். கடந்தாண்டு கரோனா தொற்று பரவலின் போது சிறையில் உள்ள விசாரணைக் கைதிகளுக்கு பரோல் மற்றும் ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து தமிழகத்தில் சிறை கைதிகள் பலருக்கு ஜாமீன், பரோல் வழங்கப்பட்டது.
தற்போது கரோனா 2-வது அலை பரவி வருகிறது. தமிழகத்தில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது. ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர்.
எனவே, தமிழகத்தில் அனைத்து சிறைகளிலும் உள்ள விசாரணை கைதிகளை ஜாமீன் மற்றும் பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. பின்னர், இதே போன்ற கோரிக்கையுடன் ஒரு வழக்கு உயர் நீதிமன்ற கிளையின் 2வது அமர்வில் நிலுவையில் உள்ளது. அந்த மனுவுடன் இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட நீதிபதிகள் உத்தரவிட்டனர்.