கெபிராஜ். 
தமிழகம்

பாலியல் புகார்: கராத்தே பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி

ஆர்.பாலசரவணக்குமார்

பாலியல் புகாரில் கைதான கராத்தே பயிற்சியாளர் கெபிராஜின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சென்னை அண்ணா நகரில் கராத்தே பயிற்சிப் பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். இவர், போரூரை அடுத்த கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கராத்தே பயிற்சியாளராகப் பணிபுரிந்தபோது, அங்கு பயின்ற ஒரு மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக, 7 ஆண்டுகளுக்குப் பிறகு அளிக்கப்பட்ட புகாரில் அண்ணா நகர் மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து, சிபிசிஐடி போலீஸார் அவரை 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்தநிலையில், அவர் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஆர்.செல்வகுமார் முன்னிலையில் இன்று (ஜூன் 16) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "7 ஆண்டுகளுக்குப் பின்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பொய்யான புகார். மனுதாரர் 2 வாரங்களுக்கு மேலாக நீதிமன்றக் காவலில் உள்ளார். அவரைக் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து விட்டனர். எனவே, ஜாமீன் வழங்க வேண்டும்" என்றார்.

போலீஸார் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், "மனுதாரர் புகார் அளித்துள்ள மாணவியிடம் மட்டுமல்லாமல் வேறு சில மாணவிகளிடமும் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதில், சிறுமிகளும் அடங்குவர். தனக்கு 13 வயதாக இருக்கும்போது பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுத்ததாக ஒரு பெண் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படலாம் என்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது" என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் மீது போக்சோ சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிய வாய்ப்பு உள்ளதால், தற்போதைய சூழ்நிலையில் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி, அவரது மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT