தென்மேற்குப் பருவக்காற்றால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
''தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் (திருப்பூர், திண்டுக்கல், தென்காசி) மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
17.06.2021
நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், எஞ்சிய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும்.
கடந்த 24 மணி நேரத்தில் பெய்த அதிகபட்ச மழையளவு (சென்டி மீட்டரில்)
அவலாஞ்சி 14, பெரியாறு, சின்னக்கல்லாறு, வால்பாறை தலா 11, சின்கோனா 7, எமரால்ட் 6, சோலையாறு 5, பாபநாசம், தேக்கடி தலா 4, பேச்சிப்பாறை 2, தென்காசி 1 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
வங்கக் கடல் பகுதிகள்
16.06.2021, 17.06.2021
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அரபிக் கடல் பகுதிகள்
16.06.2021 முதல் 18.06.2021 வரை
கேரளா, கர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.