சபாநாயகராக செல்வம் பதவியேற்பு. 
தமிழகம்

புதுவை சபாநாயகராக பாஜக எம்எல்ஏ பதவியேற்பு; 45 நாட்களாகியும் பதவியேற்காத அமைச்சரவை

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல் முறையாக பாஜக எம்எல்ஏ சபாநாயகராக இன்று பதவியேற்றார். அதே நேரத்தில், தேர்தலில் வென்று 45 நாட்களாகியும் ஆளும் கூட்டணி அமைச்சரவை பதவியேற்காத சூழலே நிலவுகிறது.

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. அமைச்சர்களை பங்கிடுவதில் இரு கட்சியிலும் கடும் மோதல் ஏற்பட்டது. இதனால், பல சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்வர் ரங்கசாமி பாஜக மேலிடத்திடம் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, இழுபறி முடிவுக்கு வந்தது. இதில், பாஜகவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள், என்.ஆர்.காங்கிரசுக்கு 3 அமைச்சர்கள், துணை சபாநாயகர் பதவி என முடிவு செய்யப்பட்டது..

இதையடுத்து, புதுவை சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை சட்டப்பேரவை செயலாளர் முனிசாமி கடந்த சனிக்கிழமை வெளியிட்டார். மணவெளி தொகுதி பாஜக எம்எல்ஏ செல்வம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரின் மனுவை முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை பாஜக தலைவர் நமச்சிவாயம், கூட்டணி கட்சி எம்எல்ஏக்கள் முன்மொழிந்தும், வழிமொழிந்தும் 8 மனுக்கள் தாக்கல் செய்தனர்.

நேற்று (ஜூன் 15) மதியம் 12 மணியுடன் வேட்புமனு தாக்கலுக்கான காலக்கெடு முடிவடைந்தது. சபாநாயகர் தேர்தலுக்கு வேறு எம்எல்ஏக்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இதனால் செல்வம் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (ஜூன் 16) காலை கூடிய புதுவை சட்டப்பேரவையில் தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், சபாநாயகராக செல்வம் தேர்வு செய்யப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து அவரை பதவியேற்க அழைத்தார். அவை முன்னவரான முதல்வர் ரங்கசாமியும், எதிர்க்கட்சித்தலைவர் சிவாவும் பேரவைத் தலைவரை அழைத்துச்சென்று இருக்கையில் அமர வைத்தனர். பின்னர், புதிய சபாநாயகரை எம்எல்ஏக்கள் வாழ்த்தி பேசினர்.

முதல்வர் ரங்கசாமி பேசுகையில், "சட்டப்பேரவையை சிறப்பாக சபாநாயகர் நடத்துவார் என நம்புகிறேன். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மக்கள் பிரச்சினைகளை எடுத்து கூற சபாநாயகர் சமமாக வாய்ப்பளிப்பார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று தெரிவித்தார்.

அதையடுத்து, சபாநாயகர் ஏற்புரைக்குப் பிறகு காலவரையறையின்றி பேரவையை ஒத்திவைத்தார். புதுவை சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக பாஜகவை சேர்ந்தவர் சபாநாயகராக பதவியேற்றுள்ளார்.

கரோனாவையொட்டி சட்டப்பேரவையில் தனிமனித இடைவெளி உடன் இருக்கைகள் மற்றும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றனர்.

அதே நேரத்தில், தேர்தலில் வென்று 45 நாட்களாகியும் அமைச்சரவை இன்னும் புதுச்சேரியில் பதவியேற்காததால் ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே கடும் அதிருப்தியில் உள்ளனர்.

SCROLL FOR NEXT