தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் இ-பாஸ் நடைமுறை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை ஓசூர் டிஎஸ்பி முரளி ஆய்வு செய்தார்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் சில தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 21-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டிருப்பது தொடர்ந்து வருகிறது.
இ-பாஸ் நடைமுறையை கண்காணிக்க தமிழக எல்லையான ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் போலீஸார் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் வாகனங்களில் வருவோரிடம் இ-பாஸ் சோதனை நடத்தப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஓசூர் ஜுஜுவாடி சோதனைச் சாவடியில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளை ஓசூர் டிஎஸ்பி முரளி ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வெளி மாநிலத்தில் இருந்து வரும் அனைத்து வாகனங்களிலும் இ-பாஸ் உள்ளதா என தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இ-பாஸ் உள்ள வாகனங்களை மட்டும் தமிழகத்துக்குள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகிறது.
மேலும் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படும் வாகனங்களில் வருபவர்களுக்கு சுகாதாரப் பணியாளர்கள் மூலமாக சானிடைசர் வழங்கி கைகளை சுத்தப்படுத்தி, உடல்வெப்பம் அளவீடு செய்யப்படுகிறது. பின்னர் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு பிறகே தமிழகத்துக்குள் செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.