தமிழகம்

போட்டியின்றி சபாநாயகராகும் முதல் பாஜக எம்எல்ஏ: புதுச்சேரியில் முதல்வர், கட்சியினருடன் மனுத் தாக்கல் செய்தார்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி சபாநாயகர் தேர்தலுக்காக முதல்வர் மற்றும் கட்சியினருடன் சென்று சட்டப்பேரவைச் செயலரிடம் பாஜக எம்எல்ஏ செல்வம் இன்று மனுத் தாக்கல் செய்தார்.

புதுவை சட்டப்பேரவை சபாநாயகருக்கான தேர்தல் வரும் 16-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் 13-ம் தேதி தொடங்கியது. என்ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணியில் சபாநாயகர் வேட்பாளராக மணவெளி தொகுதியில் வென்ற பாஜக எம்எல்ஏ செல்வம் போட்டியிடுகிறார்.

செல்வத்தின் வேட்புமனுவை முதல்வர் ரங்கசாமி முன்மொழிய, பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நமச்சிவாயம் வழிமொழிந்திருந்தார். என்ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட மனுக்களை செல்வம் இன்று தாக்கல் செய்தார்.

வேட்பு மனுவை சட்டப்பேரவைச் செயலர் முனிசாமி பெற்றுக்கொண்டார். வேட்புமனுத் தாக்கலின்போது முதல்வர் ரங்கசாமி, பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவர் நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன், அதிமுக செயலாளர்கள் அன்பழகன், ஓம்சக்திசேகர், என்ஆர்.காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்றனர். நாளை (செவ்வாய்க்கிழமை) மதியம் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைகிறது.

சபாநாயகர் தேர்தல் தொடர்பாகப் பேரவை வட்டாரங்களில் கூறுகையில்,"தேர்தலில் போட்டி இருக்கும்பட்சத்தில் வருகிற 16ம் தேதி கூடும் சட்டப்பேரவையில், தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன், தேர்தலை நடத்துவார். குரல் வாக்கெடுப்பு முறையில் தேர்தல் நடைபெறும். தேர்தலில் போட்டியில்லாத பட்சத்தில் செல்வம் சபாநாயகராகப் பதவியேற்பார். அவரை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் அழைத்துச்சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைப்பர்" என்று குறிப்பிட்டனர்.

இப்போது புதுவை சட்டப்பேரவையில் என்ஆர்.காங்கிரஸ், பாஜவுக்கு 16 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதுதவிர இந்தக் கூட்டணிக்கு 3 சுயேச்சைகள், 3 நியமன எம்எல்ஏக்களின் ஆதரவும் உள்ளது. இதனால் ஒட்டுமொத்தமாக 22 எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. எதிர்க் கட்சிகளான திமுகவுக்கு 6, காங்கிரசுக்கு 2 என 8 எம்எல்ஏக்கள் பலம்தான் உள்ளது. இதனால் சபாநாயகர் தேர்தலில் போட்டி இருக்காது. அதனால் போட்டியின்றி பாஜக எம்எல்ஏ முதல்முறையாக சபாநாயகராகிறார்.

SCROLL FOR NEXT