புதுச்சேரியில் புதிதாக 402 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 1 லட்சத்து 12 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (ஜூன் 13) வெளியிட்டுள்ள தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 8,724 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 343, காரைக்கால் - 42, ஏனாம் - 10, மாஹே - 7 என மொத்தம் 402 (4.61 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 3 பேர், காரைக்காலில் 3 பேர், மாஹேவில் ஒருவர் என 7 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 4 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள் ஆவர். ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,684 ஆகவும், இறப்பு விகிதம் 1.50 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 12 ஆயிரத்து 528 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 834 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 4,497 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 5,331 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 809 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்து 513 (93.77 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 11 லட்சத்து 64 ஆயிரத்து 795 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 10 லட்சத்து 94 ஆயிரத்து 1803 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 3 லட்சத்து 21 ஆயிரத்து 911 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.