தமிழகம்

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயல்: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விஜயகாந்த் கண்டனம்

செய்திப்பிரிவு

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மேலும் சுமையை ஏற்றும் வண்ணம் இது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதாக மத்திய அரசு கூறுவதைத் தற்போதைய சூழலில் ஏற்றுக்கொள்ள முடியாது.

மேலும், டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்துவிட்ட நிலையில், தமிழகத்தில் 100 ரூபாய் எட்டி விடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அவ்வாறு விலை உயர்ந்தால் காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலையும், வாகனங்களின் வாடகை கட்டணமும் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே கரோனா பாதிப்பால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருவது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க மத்திய மாநில, அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”.

இவ்வாறு விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

SCROLL FOR NEXT